கச்சா எண்ணெய் உற்பத்தியை சவுதி குறைந்தமையினால் அமெரிக்கா கோபத்தில்!

USA angry with KSA for reducing the Oil Production

சவுதி அரேபியா, ரஷ்யா அங்கம் வகிக்கும் ஒபெக்+ எனும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் குழு தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் குறைத்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்கிறது. ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்துக்கொண்டு சவுதி அரேபியா இத்தகைய செயலில் இறங்கியிருப்பதாகவும், இதற்காக சவுதியை தண்டிக்க போவதாகவும் அமெரிக்க அதிபர் பைடன் கோபப்பட்டுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவியது. இதனால் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இது விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்தது. பின்னர் ரஷ்யாவிடமிருந்து சப்ளை அதிகரித்தது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி சமாளித்தன. அமெரிக்காவும் தனது இருப்பிலிருந்த எண்ணெயை சந்தைக்குள் விட்டது. இதனால் தேவை குறைந்து விலையும் சரிந்தது.

இந்நிலையில் விலையை கட்டுப்படுத்த ஒபெக் எனும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் குறைத்துள்ளன. 75 டாலராக இருந்த ஒரு பேரல் தற்போது 90 டாலரை நெருங்கியுள்ளது. இது ஏற்கனவே பணவீக்க பிரச்னையில் உள்ள அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதனால் ஒபெக்கின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான சவுதி மீது அமெரிக்கா கோபமடைந்துள்ளது. ஈரானுக்கு எதிராக சவுதிக்கு வழங்கப்பட்டும் வரும் ஒருங்கிணைந்த வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு வலையமைப்பினை திரும்பப் பெறுவது பற்றியும் பேச்சு நடக்கிறது. சவுதிக்கு ஓராண்டுக்கு ஆயுத சப்ளையை நிறுத்தச் சொல்லி அமெரிக்க செனட்டர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக சிஎன்என் சேனலுக்கு அமெரிக்க அதிபர் பைடன் அளித்த பேட்டியில் “ரஷ்யாவுடன் இணைந்துக்கொண்டு அவர்கள் செய்த சில காரியங்களுக்கான விளைவுகளை சந்திக்கப் போகிறார்கள். சவுதி அரேபியாவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன்.” என எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது பற்றி சவுதி வெளியுறவு அமைச்சர் பைசல் கூறியதாவது: ஒபெக்+ முடிவு முற்றிலும் பொருளாதாரம் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு. உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஒபெக்+ உறுப்பினர்கள் பொறுப்புடன் செயல்பட்டு உரிய முடிவை எடுத்தனர், என தெரிவித்தார்.

Also Read: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கத்தார் விற்கப்படும் இறால்களை சாப்பிட வேண்டாம் – சுகாதார அமைச்சு தகவல்!

Leave a Reply